தேவையில்லாத ரன் அவுட்கள்... வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்த மும்பை அணி
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிக்கு அருகில் வந்து அதனை கோட்டை விட்டது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் நேற்று நடந்த 23வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் மயாங்க் அகர்வால் 52, ஷிகர் தவான் 70 குவித்தனர். பஞ்சாப் அணி வீரர் பசில் தம்பி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை அணியில் டெவால்ட் பிரெவிஸ் 49, திலக் வர்மா 36, சூர்யகுமார்யாதவ் 43 ரன்கள் எடுத்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் மும்பை அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிக்கு அருகில் வந்து அதனை கோட்டை விட்டது. அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 36 ரன்களில் இருந்த போது தேவையே இல்லாமல் ரன் அவுட்டானார். இதேபோல் பொல்லார்டும் ரன் அவுட்டானதால் கடைசி நேரத்தில் மும்பை அணியின் விதி தலைகீழாக மாறியது எனலாம்.