ஆதரவற்ற ஒருவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்த பெண்: பிரதமர் மோடி பாராட்டி கடிதம்
ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாக பெண் பிரதமருக்கு எழுதிய கடிதத்தையடுத்து, பிரதமர் மோடி அப்பெண்மணிக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மனோஷி ஹல்தார். இவருக்கு 48 வயது. இவர் உறுப்பு தானம் குறித்த பிரதமர் மோடி அவர்களின் உரையாடலால் கவரப்பட்டார்.
இதனையடுத்து, 2014ம் ஆண்டில் ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்தார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை அவர் எழுதி அனுப்பினார். இவரது கடிதத்தை படித்த பிரதமர் அவர்கள் பெண்மணி மனோஷிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார்.
அக்கடிதத்தில் பிரதமர் மோடி கூறியதாவது - விலைமதிப்பற்ற ஒரு உயிரைக் காப்பதற்காக உங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்தது சிறப்பானது. உங்களது செயல் என் மனதை தொட்டு விட்டது. தன்னலமற்ற உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் கிடையாது. இரக்கம் மற்றும் தியாகத்தின் நற்பண்புகள் எப்போதும் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் மையமாக உள்ளது.
கருணை மிகுந்த உங்களது செயல் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. உறுப்பு தானத்தை முன்னெடுத்துச் செல்ல பலருக்கு உங்களது செயல் ஊக்கமாக அமையும்.
இவ்வாறு பிரதமர் மோடி அப்பெண்ணை பாராட்டி பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.