மருத்துவ மாணவி தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம் - வரதட்சணை கொடுமை..?
கேரளாவில் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஷஹ்னா (26). எம்.பி.பி.எஸ் முடித்துள்ள அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார்.
மேலும், ஷஹ்னா சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவர் அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
பிரேத பரிசோதனையில் ஷஹ்னா அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு செலுத்தும் மயக்க ஊசியை போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடன் படித்து வந்த ஒருவரை ஷஹ்னா காதலித்து வந்துள்ளார்.
சிக்கிய கடிதம்
இவர்களின் திருமணத்திற்கு காதலன் வீட்டில் சம்மதித்துள்ளனர். ஆனால் வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்த வரதட்சணையை கொடுக்க முடியாததால் மனமுடைந்து ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஷஹ்னா தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்ததில், அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அக்கடிதத்தில் "இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார்.
திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.