லாட்டரி மூலம் கோடீஸ்வரராக நினைத்த கேரள நபருக்கு நேர்ந்த கதி
கேரளாவில் மோசடி செய்து லாட்டரி சீட்டில் பரிசு வென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை விதித்த நிலையில் கேரளாவில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக சாதாரண கூலி வேலை செய்துக் கொண்டிருப்பவர்களுக்கும் லாட்டரி சீட்டின் மூலம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
குறிப்பாக கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அரசு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. ஓணம், புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் மெகா பம்பர் பரிசுக்கான லாட்டரி சீட்டை கேரள அரசு விற்பனை செய்வது வழக்கம். அதிர்ஷ்டத்தால் நடைபெறும் இந்த லாட்டரி பரிசை அங்கு ஒருவர் திருட்டு தனமாக பெற முயற்சி செய்துள்ளார்.
கேரளாவில் கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்னும் நபர் அங்குள்ள ஜேஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து திருடனை பிடிக்க நினைத்த ஏஜென்சி அனைத்து லாட்டரி எண்களையும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கும் கொடுத்துள்ளது.
அதன்படி பாபு திருடிய லாட்டரியில் ஒரு சீட்டுக்கு பரிசுத்தொகை விழுந்தது. இதையறிந்த அவர் அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றுள்ளார். அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடி உள்ளார். இதன்பிறகு தலைமறைவாக இருந்த பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.