குட்டிகளுடன் மண் சரிவில் புதைந்த நாய்..மரண ஓலத்தை கேட்டு அதிரடியாக மீட்பு பணியில் குதித்த இளைஞர்கள்
கேரளா மண்சரிவில் சிக்கிய தாய் நாய் ஒன்று தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்ற மரண ஓலம் எழுப்பியது காண்பவர் கண்களை கலங்க செய்தது.
6 குட்டிகளை ஈன்று கேரள மாநிலம் பாலக்காடு அருகே கிருத்தலாப்பூர் காஞ்சித்தாணியில் ஒரு மளிகை கடைக்கு பின்னால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
அந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த கடையின் பின் புறம் மண் சரிவு ஏற்பட்டது. அந்த மண் சரிவில் தாய் நாய் தன்னுடைய 6 குட்டிகளுடன் சிக்கியது.
குட்டிகளை காப்பாற்ற ஓலம் எழுப்பும் வகையில் அருகில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிட்டுள்ளது. நாயின் அலறல்களை கேட்டதும் கடையின் உரிமையாளரான அஷ்ரப் மற்றும் அங்கு அருகில் வசிப்போர் வந்து நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலை மட்டும் வெளியில் தெரிந்தபடி புதைந்திருந்த தாய் நாயையும் இரண்டு குட்டிகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டார் அஷ்ரப். மீதமிருந்த 4 குட்டிகள் மண்ணில் புதைந்து இறந்து போயின.
இறந்து போன தனது 4 குட்டிகளை நினைத்து கண்ணீர் விட்டது அந்த தாய் நாய். மேலும் அந்த இரண்டு குட்டிகள் மீட்கப்படும்போது குளிரில் நடுங்கிய வண்ணம் காணப்பட்டன.
4 குட்டிகளை இழந்த தாய் நாய் பார்ப்பதற்கு பரிதாபமாய் காட்சியளித்தது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. நாயின் அழுகுரலை கேட்டு ஓடி வந்து உதவிய அஷ்ரஃபுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. தாய் என்ற உணர்வு அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.