கேரளாவிற்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கேரளாவில் இடைவிடாது பெய்த மழையால் அம்மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையால் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
மழை வெள்ளம், நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை மழை வெள்ளம் நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.
பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், தி.மு.க அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை தி.மு.க அறக்கட்டளையின் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் தி.மு.கழகம் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.