கேரளத்தை மிரட்டும் பறவை காய்ச்சல் - தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

kerala tamil nadu bird flu threat borders under check
By Swetha Subash Dec 17, 2021 06:00 AM GMT
Report

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழ்நாட்டுக்குள் பரவாமல் தடுக்க மாநில எல்லை பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக அங்கு ஏராளமான வாத்துகள் இறந்துள்ளன.

தற்போது வளர்ப்பு கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க இரு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாட்சி மற்றும் அதன் அருகாமையில் உள்ள கோபாலபுரம், கோவிந்தபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 வழித்தடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு கால்நடைத்துறை பராமரிப்பு சார்ப்பில் மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு, கேரள மாநிலத்தில் இருந்து வரும் கோழி இறைச்சி, கோழி தீவனம் மற்றும் முட்டையை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது.

அதேபோல் வாட்டர்வாஷ் செய்யப்படாமல் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

அதிகாலை நேரத்திலும் கோழி பாரம் ஏற்றிய லாரிகள் அதிகளவு தமிழ்நாட்டுக்குள் நுழைவதால் அதிகாலையிலேயே கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.