பாலியல் புகார் : நடிகர் விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம்
பாலியல் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உள்ள, விஜய்பாபு மீது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கொச்சி காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் விஜய்பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதன் பேரில் எர்ணாகுளம் போலீசாரும் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய்பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா)வின் செயற்குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என `அம்மா’ என்று அழைக்கப்படும் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த அமைப்பின் குழு ஒன்று பரிந்துரைத்த பிறகு, `அம்மா’ அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து `அம்மா’ அமைப்பின் துணைத் தலைவர் மணியன்பிள்ளை ராஜு பேசுகையில், `ஒருவர் மீது புகார் இருப்பதன் காரணமாகவே அவரை சங்கத்தை விட்டு நீக்கிவிட முடியாது. அவர் தரப்பு நியாயங்களைக் கேட்க வேண்டும்; அதுகுறித்து பல முறை விசாரிக்க வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினரைப் பாதுகாப்பதும் எங்கள் கடமை’ என தெரிவித்துள்ளார்.