கேரளாவில் நிகழந்த சாலை விபத்தில் 2 மாடல் அழகிகள் உயிரிழப்பு
கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் மாடல் அழகிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆன்சி கபீர் (26). கடந்த 2019ம் ஆண்டு நடந்த கேரள மாடல் அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார்.
இதே போட்டியில் கடைசி வரை போராடி ஆன்சியிடம் பட்டத்தை இழந்தவர் அஞ்சனா சாஜன் (24). அவரது சொந்த ஊர் திருச்சூர் ஆகும்.
அழகி போட்டிக்கு பிறகு 2 பேரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இதற்கிடையே நேற்று இரவு ஆன்சி கபீர், அஞ்சனா சாஜன் உள்பட 4 பேர் திருவனந்தபுரத்தில் நடந் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்து காரில் கொச்சிக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 1 மணி அளவில் கார் எர்ணாகுளம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
பின்னர் சாலையோர கட்டிடத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அழகிகள் ஆன்சி கபீர், அஞ்சனா சாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காயம் அடைந்த 2 பேரின் பெயர் விவரம் எதுவும் உடனே தெரியவில்லை. இதேபோல் காரை ஓட்டி சென்றது யார்? என்ற விவரமும் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.