கீழடி அருங்காட்சியகத்தில் இனி இலவச அனுமதி கிடையாது : கட்டணம் எவ்வுளவு தெரியுமா?
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீழடி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் தமிழர் நாகரிக வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொல்பொருட்கள் 2,600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கட்டணம் அறிவிப்பு
இதையடுத்து கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு தற்போது வரை இந்த அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மாதத்துடன் இலவச அனுமதி முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் அருங்காட்சியகத்திற்கு நுழைவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு ரூ.5, சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். வெளிநாட்டினருக்கு சிறுவர்களுக்கு ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.