“இருவருக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தான், குடும்பங்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைதான் இது” - தனுஷின் தந்தை கருத்து
நடிகர் தனுஷும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.
இந்த செய்தியை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் அவர்களது நிலைமையை இரண்டு பேரும் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும் என பலரும் இவர்களது விவாகரத்து அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல நடிகர்கள் பலரும் இந்த விவாகாரம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்த வன்னம் உள்ளனர்.
இதற்கிடையே இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா,
“தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தான் உள்ளது. குடும்பங்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைதான் இது.
இருவரிடமும் பேசியுள்ளேன். அவர்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இருவரும் தற்போது சென்னையில் இல்லை ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர்” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது