தமிழகத்தின் போர்க்களமாக விளங்கிய கரூர் மாவட்டத்தின் வரலாறு தெரியுமா?
தமிழகத்தின் போர்க்கள பூமியான கரூர் நெசவு தொழிலின் தலைநகராக மாறி தற்போது செயல்பட்டு வருகின்றது.
கரூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என்றழைக்கும் மாவட்டம் 2,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும். இம்மாவட்டத்தில் தான் அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்கின்றன. கரூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 7 வருவாய் வட்டங்களையும், 20 உள்வட்டங்களையும், 203 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் மற்றும் பெரம்பலூர் என இரண்டு மக்களவைத் தொகுதிகளையும், கரூர் , அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை என 4 சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த 1,064,493 ஆகும்.
மாவட்ட வரலாறு
இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொருட்டே இவ்வூர் கருவூர் என அழைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்ட கரூர் பகுதி அரசாட்சி காலத்தில் தமிழ் அரசர்களின் போர்களமாக இருந்துள்ளது. கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது. தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் கரூரும் ஒன்றாகும்.
ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது. தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.கரூர் பகுதி சேர சோழ மற்றும் நாயக்கர்களால் முந்தைய காலகட்டங்களில் ஆட்சி செய்யப்பட்டு பின்னர் ஆங்கிலேயர்களால் வசம் வந்தது. பண்டைய காலம் முதலே இந்த பகுதியில் தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி அதிகளவில் நடைபெற்று வந்துள்ளது.
மாவட்டம் பிரிக்கப்பட்ட வரலாறு
தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சி மாவட்டம் கடந்த 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுகாக்களை இணைத்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொருளாதாரம்
பண்டைய காலம் முதலே தங்க நகை ஆபரணங்கள் செய்யப்படுவதும், ஏற்றுமதி செய்யப்படுவதும் இங்கு அதிகளவில் செய்யப்பட்டு வந்துள்ளது. அதே போல கரூர் தமிழகத்தின் நெசவு தொழிலின் தலைநகரம் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த பகுதியில் நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில், பல பருத்தி மற்றும் பிரெஸ் ஆலைகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஜவுளி, பொறியியல் மற்றும் ரப்பர் பொருட்கள் உட்பட பல உற்பத்தித் தொழில்கள் உள்ளன.
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் இந்த ஸ்தலமும் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் காமதேனு வழிபட்டதாக நம்பப்படுகிறது.
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலமாக இது கருதப்படுகிறது. காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இந்த கோவிலில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயமமும் அமைந்துள்ளது தனி சிறப்பாகும்.
மாயனூர் கதவணை
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள மாயனூர் கதவணை கரூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கிறது. இவ்வணை, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும். குளித்தலையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு காவிரியாறு அகண்ட காவிரியாக அமைந்தள்ளது.
தென்கரை பாசனத்திற்கு இந்த அணையில் இருந்து நீர் தொடர்ந்து திறந்துவிட பட்டு வருகின்றது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில் 6,915 கன அடி தண்ணீரும், தென்கரை பாசன வாய்க்காலில், 400 கன தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழா
தமிழ் மாதமான ஆடி மாதம்,18 ஆம் தேதி காவிரி மற்றும் அமராவதி நதிக் கரையோரங்களில், பெண்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று பூஜைகள் செய்து, குடும்பத்தின் நலனுக்காக காவிரி மற்றும் அமராவதி நதிகளை வழிபாடு செய்வர்.
இந்த பூஜைக்காக மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.