திமுக - அதிமுகவினர் இடையே கடும் மோதல்.. கரூரில் பரபரப்பு.!
கரூரில் நள்ளிரவில் திமுக - அதிமுகவினர் மோதிக் கொண்டலில் 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வும், அதிமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதனையடுத்து, கரூர் மேற்கு நகர திமுக துணைச் செயலாளர் கார்த்திகேயன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுக தெற்கு நகர செயலாளர் ஏகாம்பரம் மற்றும் அவருடன் வந்த சிலர் கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திகேயனின் கார் கண்ணாடியை ஏகாம்பரம் உடைத்துள்ளார். இந்த நிலையில் வீடு திரும்பிய கார்த்திகேயனை பின்தொடர்ந்து வந்த ஏகாம்பரம் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் கார்த்தியின் வீட்டு மீது கற்களை எறிந்து, வீடு புகுந்து தாக்கி உள்ளனர்.
இதில் கார்த்திகேயன், கேசவன், உதயமூர்த்தி, சாந்தகுமார், சின்னப்பன் ஆகிய 5 பேர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிமுகவினரின் கொலை வெறி தாக்குதலை படம் எடுத்த சாந்தகுமாரின் செல்போனை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக வேட்பாளர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்ட கார்திகேயனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், திமுகவினர் தாக்கியதாக கூறி அதிமுக தரப்பில் 5க்கும் மேற்பட்டோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.