மாமன்னன் போல பாதிக்கப்பட்ட பாஜக எம்.பி வேட்பாளர்
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபத்திரம் பாதிக்கப்பட்டதை போல, பாஜகவின் கருப்பு முருகானந்தம் பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
மாமன்னன் வடிவேலு
தனித்தொகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எதிர்கொள்ளும் இடைஞ்சல்களை மாமன்னன் படம் எடுத்துக்காட்டியது. அப்படத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும் வடிவேலு பல்வேறு இன்னல்களை சந்திப்பார்.
அந்த கதாபாத்திரத்தை போலவே, பாஜகவின் கருப்பு முருகானந்தம் 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
கருப்பு முருகானந்தம்
கடந்த 2014-ஆம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர் கருப்பு முருகானந்தம். அவர் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் மல்லிப்பட்டினத்திற்கு பிரசாரத்துக்கு சென்ற போது வன்முறை நிகழ்ந்தது.
இதில் சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி ஹபீப் முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 2014-ஆம் ஆண்டு மாமன்னன் படத்தில் வரும் கதாபாத்திரம் போல, கருப்பு முருகானந்தம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, மக்களை சந்திக்க விடாமல் வேட்பாளர்களை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட முடியும் என்று தெரிவித்து இந்த வழக்கை பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கள், எதிர்குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன என்பதால் இதில் கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.