காலமானார் கருணாநிதி மருமகன் முரசொலி செல்வம் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

M K Stalin M Karunanidhi DMK Chennai Bengaluru
By Karthikraja Oct 10, 2024 07:03 AM GMT
Report

கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் காலமடைந்துள்ளார்.

முரசொலி செல்வம்

தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவரும் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம். திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம். 

murasoli selvam முரசொலி செல்வம்

இந்நிலையில் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், இன்று(10.10.2024) , காலையில் முரசொலியில் எழுதுவதற்கு அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஸ்டாலின் இரங்கல்

பிற்பகல் இவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கோபாலபுரத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்படுகிறது. முரசொலி செல்வம், கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகன் ஆவார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார். 

murasoli selvam முரசொலி செல்வம்

முரசொலி செல்வத்தின் மறைவு திமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "அந்தோ… கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே! தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் எழுதியுள்ளார்.

கலைஞரின் மனசாட்சி

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் - செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம். 

கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். "முரசொலி சில நினைவுகள்" என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.

கொள்கைத் தூண்

அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.

சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்! செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்!" என குறிப்பிட்டுள்ளார்.