கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு - மோடிக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

M K Stalin M Karunanidhi Shri Raj Nath Singh Narendra Modi Chennai
By Karthikraja Aug 18, 2024 03:24 AM GMT
Report

 கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா வெற்றிபெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இன்று சென்னை வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

kalaingar karunanithi centenary commemorative coin

 முன்னதாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி, சென்னையின் முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மோடி கடிதம்

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நாணய விழா வெளியீட்டு வெற்றி அடைய பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், ‘2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் தொலைநோக்கு பார்வை உதவும். அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் அளப்பரிய பங்காற்றியுள்ளார் கலைஞர். நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது. கலைஞர் கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார். 

ஒரு அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி. பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.

ஸ்டாலின் நன்றி

அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் பிரகாசித்தது மற்றும் அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது. இந்த நினைவு நாணயம் வெளியிடப்படும் நிலையில், கலைஞர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவர் நிலைநிறுத்தப்பட்ட இலட்சியங்களைப் போற்றுவதாகவும் அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கும். இந்த முக்கியமான தருணத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். 


2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்”மேலும், கலைஞர் கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம், சமூகத்தில் உயர்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார். 

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய பிரதமரின் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.