கூட்டணியில் தாமதம்.. திமுக தான் காரணம்! காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இதுவரைக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகிவில்லை.
ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தேவையான அம்சங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது, கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மாநாடு நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதுடன் மக்களிடம் நன்மதிப்பை பெறும் வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பங்கள் சமூகவலைத்தளங்களில் நீடிக்கின்றன.
காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது திமுகவுடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, கனிமொழி ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி 9 நாட்கள் முடிந்துவிட்டது, ஒரு குழு அமைக்கப்படும் என கூறினார்கள்.
எங்களது குழு தயார் நிலையில் உள்ளது, தாமதம் செய்வது திமுக தான். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்.
முகூர்த்த நேரத்தின்போது எல்லாம் சரியாகி விடும் என்பதைப்போல, காங்கிரஸ்- திமுக கூட்டணி பேச்சுவார்த்தையும் தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும்.
காங்கிரஸ் பலம் தரக்கூடிய கட்சி, எங்களுடன் கூட்டணியில் இருக்கும்போது தான் மதச்சார்பின்மை முகம் கிடைக்கும்.
சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய கட்சி என்றால், அந்த கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்க வேண்டும்.
கூட்டணியில் சேர்ந்துவிட்டால் எங்களை வெறும் கூட்டலாக பார்க்ககூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
