இறந்து போன பிறகும், 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி - நெஞ்சை ரணமாக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
இறந்து போன பிறகும், 16 பேருக்கு உயிர் கொடுத்த மாணவியால் நெகிழ்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மாணவி ரக்ஷிதா
சிக்கமகளூரு மாவட்டம், சோமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமிபாய். இவர்களுக்கு ரக்ஷிதா (16) என்ற மகள் இருந்தார். ரக்ஷிதா பசவனஹள்ளியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி ரக்ஷிதா கல்லூரிக்கு செல்ல பஸ்சில் ஏற முயற்சி செய்தார். ரக்ஷிதா ஏறுவதற்கு டிரைவர் பஸ்சை இயக்கிவிட்டார். இதனால், எதிர்பாராத விதமாக ரக்ஷிதா கால் தவறி பஸ்சிலிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
மூளைச்சாவு அடைந்த ரக்ஷிதா
இவ்விபத்தில் ரக்ஷிதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரக்ஷிதாவிற்கு தலையில் அடிபட்டு ரத்தப்போக்கு அதிகமானதால் அவரை சிகிச்சைக்காக சிக்கமகளூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரக்ஷிதா நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, ரக்ஷிதாவின் பெற்றோர்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இது குறித்து அவர்கள் மருத்துவர்களிடம் கூறினர். இதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவர்கள் மாணவி ரக்ஷிதாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க முடிவு செய்தனர்.
9 பேருக்கு மறுவாழ்வு
இதையடுத்து, நேற்று மதியம் அறுவை சிகிச்சை மூலம் ரக்ஷிதா உடலிலிருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. ரக்ஷிதாவின் இதயத்தை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரக்ஷிதாவின் இதயம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மற்ற உடல் உறுப்புகள் மணிப்பாலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.
ரக்ஷிதாவால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரக்ஷிதாவின் உடல் அவரது சொந்த ஊரான சோமனஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.