பஜ்ரங்தள் பிரமுகர் படுகொலை - முஸ்லிம்களை குறிவைத்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு
கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பின் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு "முஸ்லீம் குண்டர்கள்" தான் காரணம் என கர்நாடக அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கர்நாடகா மாநிலம், ஷிவமொகா நகரில் வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான ஹர்ஷாவை 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடைகள் மீது கல் எறிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மேலும் இரு பிருவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஷ்வரப்பாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஹர்ஷா ஒரு நல்ல தொழிலாளி, ஒரு நேர்மையான இளைஞர். நேற்றிரவு, முஸ்லிம் குண்டர்கள் அவரைக் கொலை செய்துவிட்டனர்.
சமீபத்தில், தேசியக் கொடிக்கு பதில் காவி கொடி டெல்லி செங்கோட்டையில் பறக்கும் என நான் பேசியது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சில கருத்துகளை தெரிவித்தார்.
மேலும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்காக சுமார் 50 லட்சம் காவி சால்வைகள் சூரத்தில் ஒரு தொழிற்சாலையில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவரின் இந்த பேச்சு தான் வன்முறையை அதிகரித்துள்ளது. இந்த வன்முறைகள் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அந்த நபரின் குடும்பத்திற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்" என அமைச்சர் கே.எஸ். ஈஷ்வரப்பா கூறினார்.
அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.