21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு - அரசு அதிரடி உத்தரவு..!
ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் இஸ்லாமிய சமூகத்தின் அடையாளமாக இல்லை எனவே ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில், பெங்களூருவில் இன்றுமுதல் வரும் 21-ம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுகையில்; "ஹிஜாப் விவகார வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதையொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர் முழுவதும் வரும் 21-ம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ அனுமதி கிடையாது.
பாதுகாப்பு பணியில் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை உள்பட 10 ஆயிரம் போலீசார் ஈடுபட இருக்கிறார்கள்.
பெங்களூரு நகர மக்கள் இதுவரை போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளனர். ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பும் பெங்களூரு மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.