தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு இல்லை...துரைமுருகன் குற்றச்சாட்டு
இன்று மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்தசிங் ஷெகாவத்தை சந்தித்த பிறகு, டெல்லியில் தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
டெல்லியில் அமைச்சர் துரைமுருகன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கை கர்நாடக அரசு கடைபிடித்து வரும் சூழலில், இன்று தமிழக எம்.பி.க்களுடன் தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினோம் என தெரிவித்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தவுடன் இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்திற்கு இல்லை
மேலும், தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கி கூறினோம் என தெரிவித்து, தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்திற்கு இல்லை என குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கு உரிய நீரை தர கர்நாடக அரசிற்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்தினோம் என குறிப்பிட்ட துரைமுருகன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக அரசு செயல்படுத்துவதில்லை என்றும் மத்திய அமைச்சரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களையே சந்தித்த பாமக தலைவரும், எம்.பி'யுமான அன்புமணி ராமதாஸ் அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 5000 கனஅடி நீர் விட மத்திய அமைச்சரிடம் உத்தரவிட வலியுறுத்தினோம்.