தாயின் சூனியத்தால் தந்தை மரணம் - ஆன்லைன் ஜோதிடரின் பேச்சை நம்பி தாயை கொன்ற மகள்
தாயின் சூனியத்தால் தந்தை உயிரிழந்தார் என ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை மகள் கொலை செய்துள்ளார்.
ஜோதிடரின் பேச்சை நம்பி கொலை
கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் 33 வயதான சுசித்ரா தனது கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் சுசித்ராவின் தந்தை திடீரென உயிரிழந்துள்ளார். இதனால், மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்த அவர் சமீபத்தில் ஆன்லைனில் ஜோதிடர் ஒருவரை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.
உனது தாய் புஷ்பவல்லி வைத்த சூனியத்தால் தான் உனது தந்தை உயிரிழந்துள்ளார் என ஜோதிடர் சுசித்ராவிடம் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் சொன்னதை உண்மை என நம்பிய சுசித்ரா, தாயின் மீது ஆத்திரமடைந்து இது குறித்து கேட்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரின் தாய் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், தலையணையை அவரது முகத்தில் அழுத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், இதை இயற்கையான மரணம் என உறவினர்களிடம் தெரிவித்து அவசரமாக இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் வீட்டில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கவனித்த கிராமவாசிகள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இறுதி சடங்கிற்கு முன்னதாக வந்த காவல்துறையினர், புஷ்பவல்லியின் மரணம் குறித்து நடத்திய விசாரணையில் தாயை கொலை செய்ததை சுசித்ரா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், புஷ்பலதாவின் வங்கிக் கணக்கில் ஒரு வீடு மற்றும் ரூ.40 லட்சம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கைப்பற்றவே இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுசித்ராவின் கணவருக்கு இந்த கொலை குறித்து தெரியுமா அல்லது அவருக்கும் பங்கு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.