கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி வெட்டிக் கொலை; சிவமொக்காவில் பதற்றம் கொலைக்கு காரணம் யார்?

karnataka bajrangdeath shivamogga
By Irumporai Feb 21, 2022 07:43 AM GMT
Report

ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டம் சற்று தணிந்துள்ள நிலையில், ஷிவமொகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பு பிரமுகர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஹர்ஷா, தொட்டபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பாரதி காலனி ரவிவர்மா வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 4 பேர் கும்பல் வழிமறித்தது. 

அப்போது, அவர்களிடம் இருந்து ஹர்ஷா தப்பிக்க முயன்றார். ஆனாலும் மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் கொலையான ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மெக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

இதனால் இருதரப்பினர் அங்கு குவிந்தனர். அந்த சமயத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் சிவமொக்கா நகரில் பதற்றமான சூழல் நிலவியது.

ஷிவமொகா நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக சிவமொக்கா மாவட்ட காவல் துணை ஆணையர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஹர்ஷாவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தற்போது இந்த  கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால்  போலீசார் விவசாரணை நடத்தி வருகிறார்கள். 

தற்போது சிவமொக்காவில் பதற்றமான சூழல் நிலவுவதால், சிவமொக்கா மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம்  தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில் , 26 வயதான ஹர்ஷாவை 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாக கூறினார்.

இந்தக் கொலைக்குப் பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தமக்கு தெரியவில்லை என்றும், ஷிவமொகாவில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறினார்.