சச்சின் வேற அவர் பையன் அர்ஜூன் வேற : அதிரடியாக பேசிய கபில்தேவ்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றிலே தொடரை விட்டு வெளியேறியது. இந்த சீசனில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
இந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் குறித்து கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ அனைவரும் அர்ஜூன் டெண்டுல்கர் பற்றியே ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காகவே. அர்ஜூனை அவரது இயல்பான விளையாட்டை விளையாட விடுங்கள்.
அர்ஜூன் டெண்டுல்கரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம். டான் பிராட்மேனின் மகன்கூட கடும் அழுத்தம் காரணமாக தனது தந்தை பெயரை சேர்க்காமலே விளையாடினார். அவரிடம் அவரது தந்தை போலவே பலரும் எதிர்பார்த்ததால் அவர் அப்படி செய்தார்.
அர்ஜூன் மீது அழுத்த்ததை திணிக்க வேண்டாம். அவர் மிகவும் சிறிய வயது வாலிபன். நான் அர்ஜூனுக்கு சொல்வது ஒன்றுதான். கிரிக்கெட்டை ரசித்து விளையாடுங்கள். அர்ஜூன் டெண்டுல்கர் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
ஒருவேளை அப்படி நிரூபிக்க நினைத்தால் உங்கள் தந்தை செய்ததில் 50 சதவீதம் செய்தாலே போதும். அதைவிட பெரிது ஏதுமில்லை. டெண்டுல்கர் என்ற பெயர் காரணமாகவே நமது எதிர்பார்ப்பு மிகவும் அதிகரிக்கிறது. ஏனென்றால் சச்சின் தலைசிறந்தவர். “
இவ்வாறு அவர் பேசினார்.