‘அர்ஜூன் டெண்டுல்கரை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது’ - கபில் தேவ் காட்டம்!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்லாயிரம் கணக்கான ரன்களை குவித்து சர்வதேச அளவில் இந்தியாவை பல தருணங்களில் பெருமையடைய செய்த பேட்ஸ்மேன் ஆவார்.
கிரிக்கெட்டில் தந்தையின் பயணத்தையும், சாதனையையும் பார்த்து வளர்ந்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் வரவே சில போட்டிகளில் பங்கேற்க தொடங்கி தனது திறமையை வெளிக்காட்ட முயற்சித்து வருகிறார்.
இடது கை பவுலரான அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மேலும், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த 2021 மற்றும் 2022 என இரண்டு ஐபிஎல் சீசன்களாக மும்பை அணியுடன் பயணித்து வருகிறார்.
ஆனால் 22 வயதான அர்ஜுனுக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் மும்பை அணியில் அர்ஜுனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது குறித்து கருத்து தெரிவித்த ஷேன் பாண்ட்,"மும்பை போன்ற ஒரு அணியில் இடம்பெறுவதும், பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பதும் வேறு வேறு.
அர்ஜுன் அதற்காக இன்னும் கடின உழைப்புகளை செலுத்த வேண்டி இருக்கிறது. அதன்மூலம் அவர் தனது ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நிச்சயம் அவர் அதனை செய்வார் என நம்புகிறேன். அதன் மூலம் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம்” என தெரிவித்தார்.
இந்நிலையில், டெண்டுல்கரின் மகனாக இருப்பதில் சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தன் தந்தையை போலவே வரவேண்டும் என பலரும் எதிர்பார்த்தால் அழுத்தம் தாங்க முடியாமல் டான் பிராட்மேனின் மகன் தனது பெயரை மாற்றிக்கொண்டார். அர்ஜூனை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது எனவும் கபில் தேவ் கூறியுள்ளார்.