மாநில அரசியலுக்கு வரும் கனிமொழி? திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கனிமொழி கருணாநிதி எம்.பி போட்டியிட வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது, கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரம் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் கனிமொழி கருணாநிதி போட்டியிடவேண்டும் என நாட்டுப்புறக் கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அழிந்து போய்க் கொண்டிருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் விதமாக, 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை சங்கமம், கலைகளையும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து, அவர்களுக்கு மரியாதையும் போற்றுதலும் அளித்து வருகிறது.
இத்தகைய முன்னோடியான முயற்சிகளை மேற்கொண்ட திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், கலைஞர்களின் அன்பும் ஆதரவும் பெற்றவருமான முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகளான திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழ் மக்களுக்கும், தமிழ் கலைஞர்களுக்கும், பெண்கள் சமூகத்திற்கும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் கோரிக்கை
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில்,
நாடார் சமுதாய மக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும், ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரவலாக வசித்து வருகின்றனர்.
இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் சமுதாயமாக நாடார் சமுதாயம் திகழ்கிறது.
மேற்கண்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு, சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக சேவை செய்து வருவதையும், அவர்களில் எங்களது சமுதாயத்தை சேர்த்த பலருக்கு தங்களது நல்லாட்சியில் அமைச்சர் பொறுப்புகள் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எங்கள் சமுதாயம் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூருகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று எங்கள் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், மகளிர் உரிமைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவராக விளங்க வாய்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
