கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எம்.பி. கனிமொழி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததும் அனைத்துகட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து கொண்டே வருகிறது. வேட்பாளர்கள், கழக நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தற்போது சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கும் கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா நோயாளிகள் இறுதியாக வந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு பிபிஇ உடை அணிந்து வந்த கனிமொழி தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கனிமொழி குணமடைந்து விட்டதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனிமொழி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.