மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி ஆவேசம்
திமுக ஆட்சி அமைந்தால் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரசார பயணத்தை மதுரையில் கனிமொழி மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மதுரை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது, :கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக அரசு நிவாரண நிதியை முறையாக வழங்கவில்லை பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியை அரசு வழங்க மறுத்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படும். மத்திய அரசு எதைச் செய்தாலும் அதற்கு தலையசைக்கும் அரசாக அதிமுக அரசு இருந்துவருகிறது. இங்கிருக்கும் அமைச்சர்களும் செயல்படாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். இதனால் மக்களுக்கான உரிமைகள் பறி போய்க்கொண்டிருக்கின்றன.
அதுபோலவே மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநில உரிமைகள் மீட்கப்படும். அதோடு மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தற்போது மக்களிடையே மாற்றம் வர வேண்டும் என்ற மனநிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக பெண்களிடையே அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கி இருக்கிறது.
மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்களே எனக் கேட்கிறீர்கள், ஆனால் தலைவர் திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவரது நினைவிடத்துக்கு இடம் கொடுக்க எத்தகைய நிலையை அதிமுக அரசு மேற்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்