இந்திராவின் மருமகளே வருக...தேசிய அரசியலின் கவனத்தை ஈர்க்கும் கனிமொழி
திமுகவின் மகளிர் அணி சார்பில் வருகின்ற 14.10.2023 நடத்தப்படவுள்ள மகளிர் உரிமை மாநாடு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை மாநாடு
இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணைப்பொதுச்செயலாளருருமான கனிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் - பெண்ணுரிமைக்காகவும் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றி உள்ளார் என பதிவிட்டு, அவர்தான், அரசு வேலைவாய்ப்பிலும் - உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, சொத்துரிமை உள்ளிட்டவற்றை முதலமைச்சராக இருந்து போது சட்டமாக்கினார் என பகிர்ந்துள்ளார்.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ‘திராவிட மாடல் ஆட்சியின் வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள்,மகளிரை அர்ச்சகராக்கியது என பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார் என பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திராவிட கழகத்தின் நீண்ட கால கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, பாஜக அரசு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது என குற்றம்சாட்டிய அவர், ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில் உள்ளது குறிப்பிட்டுள்ளார்.
“இந்திராவின் மருமகளே வருக”
எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக மகளிர் அணி சார்பில் வருகின்ற 14.10.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது என அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தலைவர் கலைஞரால் “இந்திராவின் மருமகளே வருக” என வரவேற்கப்பட்டவருமான அன்னை சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.