‘தனியாக அழைத்து சென்று ஆடைகளை கழட்ட சொல்வான்’ - தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பகிர்ந்த நடிகை
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி 72 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதில் அமெரிக்க சிறை போன்ற செட்டில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்திய எபிசோட்டில் முனாவர் ஃபாருக்கி என்ற போட்டியாளர், தாம் சிறு வயதில் பாலியல் ரீதியான துன்புறுத்தளுக்கு ஆளானதாக தெரிவித்தார்.
‘6 வயதில் தொடங்கிய இந்த பாலியல் தொல்லை 11 வயது வரை தொடர்ந்தது. அதுபற்றி என்னால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்து எனது குடும்பத்தினர் உள்பட யாரிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டவர்கள் எனது உறவினர்கள்தான்’ என்ற அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார்.
இதைக்கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகையுமான கங்கனா ரனாவத், தானும் சிறு வயதில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.
இது பற்றி கங்கனா கூறுகையில், “சிறுவயதில் நான் வசித்திருந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் தொடுவான். சில சமயங்களில் என்னை அழைத்து சென்று ஆடைகளை கழட்டச் சொல்வான்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்த பையன் என்னை விட 4 வயது தான் மூத்தவன். அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தங்களது குடும்பம் எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் இது போன்ற சம்பவங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் இது குறித்து யாரும் பொதுவெளியில் பேசுவதில்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து பெற்றோர்கள் கற்பிப்பது அவசியம். அதன்மூலம் மட்டுமே சமூகத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தடுக்க முடியும்” என கங்கனா தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக நிகழ்ச்சியில் தெரிவித்து பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார்.