‘இங்கு பாலியல் ரீதியிலான சுரண்டல்கள் சர்வசாதாரணம்’ - நடிகை கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் பாலியல் ரீதியிலான சுரண்டல்கள் சர்வசாதாரணம் என இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி 72 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதில் அமெரிக்க சிறை போன்ற செட்டில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்கள், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.
அதே போல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கங்கனா ரணாவத்தும் பாலிவுட்டில் புதைந்திருக்கும் சில உண்மைகளை இந்த நிகழ்ச்சியில் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய எபிசோடில் டிசைனர் சாய்ஹா ஷிண்டே தான் கடந்து வந்த பாதையும், பிரபல டிசைனர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட உறவு குறித்தும் பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய கங்கனா, "பாலிவுட் மற்றும் ஃபேஷன் துறையில், குறிப்பாக இளம் தலைமுறையிடம் பாலியல் ரீதியிலான சுரண்டல்கள் சர்வசாதாரணம். எவ்வளவுதான் இந்த துறையை நாம் நியாயப்படுத்தினாலும் அதுதான் உண்மை. இது பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது.
அதேபோல் பலரது கனவை சிதைத்து நிரந்தர காயமாக்கியும் இருக்கிறது. இது பாலிவுட்டின் கறுப்பு உண்மை. ஒவ்வொரு துறையிலும் பாலியல் சுரண்டல்கள் இருக்கின்றன. ‘மீ டூ’ வந்த போது என்ன ஆனது? குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பவர்களைக் காணாமல் போகச் செய்துவிடுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஆதரவு கொடுத்த போது எனக்கும் தடை விதித்தார்கள். அதே சமயம் நான் ஆதரவு கொடுக்கும் பெண்கள் காணாமலும் போய்விடுகின்றனர்" என்று தெரிவித்தார்.