தோல்விக்கு இது தான் முக்கிய காரணம் - வேதனையில் கேன் வில்லியம்சன்
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்களும், கப்தில் 28 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் மார்ஸ் டேவிட் வார்னரை விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 77 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களும் எடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
இந்தநிலையில், இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், “நாங்கள் எங்களால் முடிந்தவரை போராடினோம்.
எங்களது கடின உழைப்புகள் மற்றும் முயற்சிகள் மூலமே இறுதி போட்டி வரை வந்துள்ளோம். ஆனால் துபாய் ஆடுகளங்கள் சற்று சவாலானது.
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போதுமான ரன்களை குவித்தோம். ஆனால் ஆஸ்திரேலிய அணி மிக இலகுவாக நாங்கள் நிர்ணயித்த இலக்கை எட்டிவிட்டது.
ஆஸ்திரேலிய அணி அசுரபலம் கொண்ட அணி. எங்கள் வீரர்கள் தங்களது முழு பங்களிப்பையும் செய்தனர், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
எங்கள் வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். ஆனால் வெற்றிக்கான எங்களது பங்களிப்பு போதுமானதாக இல்லை என தோன்றுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது” என்று தெரிவித்தார்.