காஞ்சிபுரத்தை மிரட்டி வந்த பிரபல ரவுடி தியாகு குண்டர் சட்டத்தில் அடைப்பு
கொலை,கொள்ளை, அடிதடி என 75 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தியாகு குண்டர் சட்டத்தில் அடைப்பு.
ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் 5 முறை குண்டர் தடைச் சட்டம் தியாகு மீது போடப்பட்டு குண்டர் சட்டத்தை 3 மாதத்திலேயே உடைத்துக் கொண்டு வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
கம்போடியா நாட்டில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட காஞ்சிபுரத்தின் தாதா என வர்ணிக்கப்படும் ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னர்,
ஸ்ரீதரிடம் ஓட்டுனராக வேலை செய்த தினேஷ் ஒரு குழுவாகவும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஒரு குழுவாகவும் காஞ்சிபுரத்தை கதிகலங்கி வைத்து வந்தனர்.
இவர்கள் செய்யும் அட்டகாசத்தால் காஞ்சிபுரம் நகர மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வந்தார்கள்.இவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய தாதா என்கின்ற போட்டியில் மாற்றி மாற்றி ஆட்களை கொலை செய்வதும்,
ஆட்களை கடத்துவதும், வியாபாரிகளை மிரட்டி பணம் சம்பாதிப்பதும் போன்ற செயல்களை செய்து காஞ்சிபுரம் நகரை எப்போதும் பதட்டத்தில் வைத்து இருந்தார்கள்.
தாதா ஸ்ரீதரின் வலது கரமான பிரபல ரவுடி தினேஷின் நெருங்கிய கூட்டாளியான தியாகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூ டெல்லியில் மதராஸ் காலனி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்தார்.
அந்த சமயத்தில் அவரை பிடிக்க திட்டமிட்டிருந்த போது தியாகு தப்பித்து ராஜ்குமார் என்பவனின் காரில் அரியானா மாநிலம் நோக்கி சென்றார்.
அப்போது ஏடிஎஸ்பி. வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படையினர் அரியானா பார்டர் கொடுஹா என்ற பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வைத்து துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்து விமானம் மூலம் மீனம்பாக்கம் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்தியசிறையில் தியாகு அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் 11 கொலை, 23 கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி என மொத்தம் 75 வழக்குகளில் சம்மந்தப்பட்ட 33 வயதான தியாகு,
விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய சரித்திரப் பதிவேட்டில் கொடுங்குற்றவாளியாக கருதப்படுகிறார்.
இவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க,
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி, தியாகுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் 5 முறை குண்டர் தடைச் சட்டம் தியாகு மீது போடப்பட்டு குண்டர் சட்டத்தை 3 மாதத்திலேயே உடைத்துக் கொண்டு வெளியே வந்த நிலையில்
தற்போது மீண்டு அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.