படுதோல்வி சந்தித்தது ஏன்?: மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளோடு கமல் ஆலோசனை
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டமன்ற தேஹ்த்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக தேர்வானார்.
இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல் ஹாசன் அவர்களது மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
குறிப்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கிடையே, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
மேலும், அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் தோல்வியைச் சந்தித்தனர்.
பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடத்தைக் கூட மநீம பிடிக்கவில்லை. மேலும், 2019 மக்களவைத் தேர்தலில் 3.71 ஆக இருந்த வாக்கு சதவீதம், இத்தேர்தலில் 2.45 சதவீதமாகச் சரிந்தது.
இந்த நிலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகளோடு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.