திடீரென ரத்தானது கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரம்.. காரணம் என்ன?
கமல்ஹாசனின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கான விளக்கத்தை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் கமல் ஹாசன் அவர்கள் இன்று கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் தான் தென் மாவட்ட பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.