ராட்சத புயலால் 114 பேர் உயிரிழப்பு - 127 பேரை காணவில்லை!
கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்மேகி புயல்
பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள தீவுகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின.

இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆற்றங்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். 127 பேரை காணவில்லை.
114 பேர் பலி
சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 4,50,000 பேர் உட்பட 5,60,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

தொடர்ந்து அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவசர நிதியை அரசு விரைவாக வழங்கவும், உணவுப் பதுக்கல், அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை தடுக்கவும் இது உதவும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் பசிபிக் கடலில் உருவாகியுள்ள மற்றொரு புயல், கடும் புயலாக வலுப்பெற்று பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணங்களை அடுத்த வார தொடக்கத்தில் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.