பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்கினார்.
இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அழகர்கோயில் மலையில் அருள்பாலிக்கும் சுந்தரராஜப் பெருமாள்(அழகர்) சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளில் கள்ளழகர் கோலம் ஏற்றி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி நேற்று இரவு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார்.
அங்கு சுந்தரராஜப் பெருமாள் அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் வைகைக்குப் புறப்பட்டார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் இறங்கினார், அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து இன்று மதியம் அண்ணாநகர், யானைக்குழாய் பகுதிகளில் உள்ள திருக்கண் மண்டபங்களிலும், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
