திரை மொழி முதல் செம்மொழி வரை - தமிழ் மொழியே விண்ணில் சென்ற தினம்!!
கலைஞர் கருணாநிதி தனது 24ஆவது வயதிலிருந்து 87ஆவது வயதுவரை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என திரைத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த வகையில் தனது சமூக, அரசியல் செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே சினிமா பங்களிப்பையும் கருதியுள்ளார் என்பதை அவரது தொடர் செயல்பாடும், ஈடுபாடும் நமக்கு உணர்த்துகின்றன.
தியேட்டர்களில் வரும் பெயருக்கு மட்டுமே கை தட்டும் ஓசை கேட்டும் என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். நடிகர், நடிகை இண்ட்ரோ சீனுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, எழுத்து, இயக்கம் என வரும் கருணாநிதியின் பெயருக்கு மட்டுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இப்படி தன் எழுத்திலேயே ரசிகர்களை கவர்ந்த மாமனிதர். மிகச் சரியாக தனது வாலிபப் பருவத்தில் 24ஆவது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கலைஞர் அதன் வளர்ச்சி மாற்றங்களுடன் பயணித்து நான்கு தலைமுறை நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணி செய்துள்ளார். இவ்வாறு நான்கு தலைமுறையுடன் பணி செய்தவர்கள் மிக மிகச் சிலரே ஆவர்.
தனது தந்தை வயதுடைய உடுமலை நாராயணகவி யோடு (1899-1981) பணி செய்யத் துவங்கியவர் தனது பேரன் வயதுடைய பா.விஜய் வரை இணைந்து பணி செய்திருக்கிறார்.
சினிமாவில் தொடங்கிய அரசியல்:
வெவ்வேறு அரசியல் போக்குடைய காலகட்ட சினிமாவில் பயணித்தபோதும் பிற சினிமாக்காரர்களைப் போல அந்த அந்தக் காலகட்டங்களில் மேலோங்கும் சமூக, அரசியல் போக்குகளோடு சமரசம் செய்துகொண்டு அதில் தங்களை கரைத்துக் கொள்வதைப் போல் இல்லாமல், எதிர்நீச்சலிடும் மீனைப்போல கலைஞர் உடன்பாடற்ற சமூக, அரசியல் போக்குகளின் மேலாதிகத்தை எதிர்த்து தனது கொள்கைகளை வசனங்களாக்கி திரையில் முழங்கினார்.
இது தந்தை பெரியார் கொள்கைகளில் அவருக்கு இருந்த பற்றுறுதியைக் காட்டுகிறது. அவர் பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளை மட்டுமின்றி ஜாதி, தீண்டாமைக்கெதிராக மிகத் தீவிரமான கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
கருணாநிதியும் பத்திரிகையாளர் தான்:
திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் உச்சம் பெற்றிருந்த சமயத்தில் இயக்கத்தின் பத்திரிகைகள் பகுத்தறிவு, சமூக நீதி சிந்தனைகளை மக்களிடம் முன்னெடுத்துக்கொண்டிருந்த வேளையில் 1941-ல், கருணாநிதி தன் 16 வயதில் “மாணவ நேசன்” என்கிற கையெழுத்து ஏட்டினை தொடங்கி பத்திரிகையாளராக எழுத்துலகில் அடியெடுத்து வைக்கிறார்.
அன்றைய காலகட்டத்து கையெழுத்து ஏடுகளைப் போலல்லாமல் குறைந்தது ஐம்பது பிரதிகள் என மாதத்திற்கு இரண்டு வெளியீடுகளாக, எட்டு பக்கத்திற்கு குறையாமல், ‘மாணவ நேசன்' வெளியாகிருக்கிறது. ஏப்ரல் 26, 1942 அன்று வெளியான திராவிட நாடு இதழில் கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்தி “இளமைப்பலி”என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய கட்டுரை மிகுந்த கவனத்தைப் பெற்றது.
பெரியாரின் ‘குடி அரசு' இதழில் உதவி ஆசிரியாராக சிறிதுகாலம் பணியாற்றிய கருணாநிதி, நவம்பர் 11, 1945-ல் குடி அரசு இதழில் ‘மூனாகானா' என்கிற பெயரில் “அண்ணாமலைக்கு அரோகரா” என்றும், ‘ஜனநாயகம்' இதழில் ப.ஜீவானந்தம் எழுதிய “ஈரோட்டுப்பாதை” கட்டுரைக்கு மறுப்பாக ‘பேனாமுள்' என்கிற பெயரில் “எழுதவில்லை” என்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
செய்தி வாசிப்பாளர் கருணாநிதி:
செய்தி வாசிப்பாளராகவும் கூட கருணாநிதி செயல்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தையேக் கொடுக்கும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசை அன்றைய இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து தாக்க முற்பட்ட சூழலை விளக்கி திருவாரூரில் பள்ளி மாணவராக இருந்த கருணாநிதி செய்தியாக வாசித்துள்ளார்.
பேச்சு வழக்கை மாற்றியமைத்த பெருமை:
ஊனம், விதவை, அலி என்று ஏழனமாக அழைக்கப்பட்ட பெயர்களை மாற்றுத்திறனாளி, கைம்பெண், திருநங்கை என்று புது புது பெயர்களை சூட்டி இன்று பேச்சு வழக்கையே மாற்றியுள்ள பெருமை அவரையே சாரும்.
அரசியல் வாழ்க்கை:
அறிஞர் அண்ணாவுடன் பணியாற்றி அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த கருணாநிதி படிப்படியாக உயர்ந்து இதுவரை 5 முறை முதலமைச்சர் பதவி வகித்துள்ளார். யாருமே அனுபவிக்காத வாழ்க்கையை வழங்கி புது உலகத்தை கொடுத்தவர்.
கைரிக்ஷா முதல் டிவி வரை அனைத்து வசதிகளையும் இலவச திட்டமாக பொதுமக்களுக்கு வாரி வாரி வழங்கினார்.
ஒளியாய் திகழ்ந்து மொழியாய் மறைந்தவர்:
இப்படி அனைவரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக மாறிய கலைஞர் கருணாநிதி மக்களுக்காக பல முறை போராட்டங்கள் மூலம் குரல் எழுப்பியுள்ளார்.
தனது பேனாவாலேயே தமிழ்நாட்டை மாற்றிய அவர், ”தமிழுக்காகவே பிறந்து தமிழுக்காகவே வளர்ந்து, தமிழுக்காகவே போராடி தமிழாகவே மறைந்தார்”.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே நாளில் தான் இயற்கை எய்தினார்.
தமிழ் என்ற மொழி உள்ள வரை அவரது எழுத்தும், பேச்சும் என்றென்றும் போற்றப்பட்டு கொண்டே தான் இருக்கும்.. செம்மொழியான தமிழ் மொழியாம்..!! வாழ்க தமிழ்!!