கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு கலைஞர் பெயரில் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல், தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர்.
தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும். இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான இன்று ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்குவதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று அவருக்கு விருதினை வழங்கினார்.