மீண்டும் கச்சத்தீவு இந்தியா வசமாகிறது? - வெளியான முக்கிய தகவல்
இந்திய-இலங்கை இடையே உள்ள பாக் நீரிணையில் அமைந்துள்ள, இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான ஒப்பந்தத்தைத்தான் கச்சத்தீவு ஒப்பந்தம் என்று சொல்லப்படுகிறது.
1974ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி, இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி, இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவிடம் கையொப்பமிட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, 1976-ஆம் ஆண்டு ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளப்பட்டது.
1976-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை கிடையாது என்று ஒப்பந்தமானது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தரவில்லை என 2013-ம் ஆண்டு இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியது. கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு மீண்டும் இந்தியா வசமாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கு திரைமறைவில் முயற்சி நடப்பதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.