இவங்க புத்தியே கலவரப்புத்தி: பா.ஜ.க மீது கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

bjp communist k balakrishnan
By Irumporai Sep 02, 2021 12:55 PM GMT
Report

நோய்த்தொற்று காலத்திலும் கூட கலவரத் திட்டங்களை கைவிடாத பாஜகவின் நோக்கம் கடவுள் பக்தி அல்ல,கலவர புத்தியே ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.

ஆனால்,இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று கூறினார். இந்நிலையில்,நோய்த்தொற்று காலத்திலும் கூட கலவரத் திட்டங்களை கைவிடாத பாஜகவின் நோக்கம் கடவுள் பக்தி அல்ல,கலவர புத்தியே ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் :

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபர்கள் கரைக்க அனுமதி உண்டு எனவும் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு மட்டுமின்றி அனைத்து மத வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்தந்த மதங்களை சேர்ந்த மக்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 இந்நிலையில் தடையை மீறுவோம் என பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதேபோல இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் தடையை ஏற்க முடியாது என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என கூச்சலிடுகின்றனர்.

இவ்வாறு அரசியல் செய்வது தேவையற்ற பதட்டத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் உருவாக்கும் நோக்கத்திலேயே ஆகும். பாஜக ஆளும் மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதியாக நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை கலவரமாக மாற்றியவர்கள் இவர்களே. நோய்த்தொற்று காலத்திலும் கூட தங்கள் கலவரத் திட்டங்களை கைவிட பாஜக, இந்து முன்னணி பரிவாரம் தயாராக இல்லை.

இவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல. கலவர புத்தியே ஆகும். எனவே தமிழக அரசு தனது அறிவிப்பை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பாஜக பரிவாரத்தின் கலவர அறிவிப்பை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்