ரயில்வே தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆந்திராவில் தெலுங்கு துணை நடிகை ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த நடிகை ஜோதி ரெட்டி, தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவர் மகர சங்கிராந்தி பண்டிகைக்காக கடப்பா சென்று அங்கு 3 நாட்கள் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் வந்துள்ளார்.
இதனிடையே ஜோதி ரெட்டி கடந்த 18 ஆம் தேதி ஹைதராபாத் ஷாத்நகர் ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் பார்த்துள்ளனர், உடனே அவர்கள் இதுபற்றி, அருகில் இருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்து பார்த்த ரயில்வே போலீசார் ஜோதி ரெட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் துணை நடிகை ஜோதி ரெட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஜோதி ரெட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவருடைய உறவினர்கள் சிலர் வலியுறுத்தியதை அடுத்து, ஜோதிரெட்டி இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், ஓடும் ரயிலில் ஜோதி ரெட்டி உண்மையில் தவறி விழுந்து இறந்தாரா? அவரை யாரேனும் தள்ளிவிட்டார்களா? என்ற பாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.