மோடியை ஆதரிப்பதற்காக இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பதா? - பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம்
பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்' என்று இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை அண்மையில் வெளியிட்டது. அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்த இசைஞானி, பிரதமர் மோடி, அம்பேத்கர் போன்று செயல்படுவதாகவும் மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருந்தார்.
இதற்கு மத்தியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாகவும் இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதையை இப்படி இழிவு செய்து வருகின்றனர்.”
மேலும், “அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது. இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
இது மாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன.” என தெரிவித்திருக்கிறார்.