பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் அடித்துக் கொலை? - வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் தாலிபன் தீவிரவாதிகளால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டதாக அமெரிக்காவில் செய்தி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறுவதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்காக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் நடந்த மோதலில் இந்திய பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் டேனிஷ் சித்திக் பத்திரிகையாளர் என தெரிந்தே அவரை தலையில் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக அமெரிக்காவில் உள்ள நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில் டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தான் ராணுவ குழுவுடன் கந்தகார் ஸ்பின் போல்டாக் பகுதிக்கு சென்றார். அப்போது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதால் டேனிஷ் சித்திக்கிடம் இருந்து ராணுவ கமாண்டர் மற்றும் சிலர் பிரிந்து சென்றனர்.
அவருடன் மூன்று ராணுவ வீரர்களே உடன் இருந்தனர். தாக்குதலில் காயம் அடைந்த டேனிஷ் சித்திக்கை ஒரு மசூதிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தலிபான்கள் அங்கும் தாக்குதல் நடத்தினார்கள். டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் உயிருடன் பிடித்தனர். பின்னர் அவர் பத்திரிகையாளர் என்ற அடையாளத்தை சரி பார்த்த பிறகு அவரை கொன்றனர். டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முயன்ற ராணுவ கமாண்டர், மற்ற வீரர்களையும் கொன்றனர்.
தலிபான்கள் போர் விதிகளை மதிக்கவில்லை என்று அந்த செய்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.