சீமானெல்லாம் வாழ்கிற போது நான் ஏன் சாக வேண்டும்? - கோபத்தில் வீடியோ வெளியிட்ட ஜோதிமணி

seeman jothimani MP KT Raghavan
By Petchi Avudaiappan Sep 03, 2021 05:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வியெழுப்பி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தமிழக பாஜக மாநில செயலாளரான கே.டி.ராகவனின் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். அதை காட்சிப்படுத்துவதுதானே சமூக குற்றம். முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என சீமான் கூறியிருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றும், அவரின் இந்த செயல் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சீமான், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் சுரண்டல், பாலியல் கொடுமை பற்றி பேசும் தங்கை ஜோதிமணி போன்றவர்கள் ,உங்கள் கட்சியின் தலைவர் அனுப்பின ராணுவம் பல்லாயிரக்கணக்கான அக்கா, தங்கைகளை, உன்னைப்போன்ற தங்கைகளை வன்புணர்ச்சி செய்து கொலை செய்தார்கள். அதைப்பற்றியெல்லாம் நீங்க ஒரு வார்த்தை பேசல...கண்டிக்கல. இவர்களுக்கு கண்ணுல தூசியா நான் உறுத்திக்கிட்டே இருக்கேன். படுக்கும்போது என்னைய திட்டி ஒரு பதிவு. எழுந்திருச்சதும் ஒரு பதிவு என கடுமையாக தெரிவித்திருந்தார்.

மேலும் என்னைய பிஜேபியின் பி டீன் என்கிறாய். ரொம்ப கஷ்டமா இருந்தா வெசம் குடிச்சு செத்துப்போ எனவும் சீமான் தெரிவித்திருந்தார். இதன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜோதிமணி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள,அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற திரு. சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என காட்டமாக தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோவில் ராகவன் பாலியல் குற்றத்தை நாங்கள் தட்டிக் கேட்டோம். பாஜக பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் அதன் தலைவராக இருக்கின்ற அண்ணாமலை குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவோம் என்று சொன்னதையும் எதிர்த்து நாங்கள் போராடினோம். இதற்காக அண்ணாமலையிடம் இருந்தும், ராகவனிடம் இருந்தும் எந்த எதிர்வினையும் வரவில்லை. ஆனால் மாறாக சீமானிடம் இருந்து எதிர்வினை வந்தது.

உலகத்தில் வேறு யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்று எந்தவித கூச்சமும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல் சீமான் பொதுவெளியில் ராகவனின் பாலியல் குற்றச்சாட்டை ஆதரித்து இருந்தார். ஏன் சீமான் பாலியல் குற்றத்தை ஆதரிக்கிறார்? தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெறி கட்டுகிறது? அதனால்தான் நான் சீமானைப் பார்த்து கேட்டேன். உங்கள் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் அதற்கு பயந்துதான் நீங்கள் ராகவனின் பாலியல் குற்றச்சாட்டை ஆதரிக்கிறீர்களா? இல்லை பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என்பதால் நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது. சீமானிடம் எந்த தவறும் இல்லை என்றால் அவர் என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

நேர்மையாக நியாயமாக பதில் சொல்ல வேண்டியது தானே. அப்படி பதில் சொல்ல முடியாமல் ஏன் நீ விசம் கொடுத்து சாவேன் என்று சொல்கிறார். இதுதான் ஒரு கண்ணியமான அரசியலா? நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்? பெண்ணால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட சீமான் பாஜகவின் பாலியல் குற்றச்சாட்டை அப்பட்டமாக ஆதரிக்கிற சீமான் எல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் போது என்னை மாதிரி பெண்கள் புரட்சிக்கு போராடுகின்ற நான் ஏன் விஷம் குடித்து சாகணும். எங்கெல்லாம் பிரச்சினை வருகிறதோ குற்றங்கள் நடக்கிறதோ அங்கே நான் மட்டுமல்ல எல்லா பெண்களும் போராடுவோம்.

இந்த மாதிரி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை நாங்கள் தொடர்ந்து தோலுரிப்போம். என்னை போய் சாவு என்று சொன்னதற்காக நாங்கள் பயந்து கொண்டு பின்வாங்கி விட மாட்டோம். இன்னும் தைரியமாக வீரியமாக கேள்விகள் கேட்டு உங்கள் உண்மையான முகத்தை தோலுரித்து மக்களுக்கு காட்டுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.