மதுபோதையில் இங்கிலாந்து வீரர்கள் அட்டகாசம் : இருவர் சஸ்பெண்ட் ? - கடுப்பில் ரசிகர்கள்
ஆஸ்திரேலிய வீரர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் மதுபோதையில் அட்டகாசம் செய்து போலீசாரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி 4 - 0 என படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் அதிகப்படியான மதுபோதைக்கு அடிமையானதே காரணம் என குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.
ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் மதுபானங்களுடனேயே நேரத்தை கழித்துள்ளனர். போட்டி நேரங்களின் போதும் போதையில் தான் விளையாடியுள்ளனர். இதனால் உடல்பருமன் அதிகமானது மட்டுமல்லாமல், வரலாற்றில் மிக மோசமான தோல்வியையும் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனிடையே அடுத்த சர்ச்சையில் இங்கிலாந்து வீரர்கள் சிக்கியுள்ளனர். ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர் ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லியான், ட்ராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகியோருடன் இணைந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் சீனியர் பவுலர் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு தொடங்கிய அவர்களின் கொண்டாட்டம் காலை 6 மணி ஆன போதும் முடிவடையவில்லை.
அவர்கள் தங்கியுள்ள க்ரோன் ப்ளாசா ஹோட்டலின் பால்கனி அருகே அமர்ந்து இரவு முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் மது அருந்தியுள்ளனர். இதனால் தூக்கமிழந்த மற்ற வாடிக்கையாளர்கள் உடனடியாக காவலர்களை அழைத்து, வலுக்கட்டாயமாக வீரர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கேப்டன் ஜோ ரூட், ஆண்டர்சன் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருகிறது. மோசமான தோல்வியடைந்தது மட்டுமின்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாக கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுவதால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.