ஒரு ரூபாய்க்கு இணையசேவை - ஜியோ நிறுவனத்தின் அசத்தலான திட்டம்

jio onerupeerechargedataplan
By Petchi Avudaiappan Dec 15, 2021 11:51 PM GMT
Report

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய ஒரு ரூபாய் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது அசரடிக்கும் திட்டங்களால் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தங்கள் வசம் ஈர்த்துவருகிறது. தங்களின் போட்டி நிறுவனங்களை விட விலை குறைவான திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதே இதற்கு காரணமாகும். 

இதனிடையே தற்போது இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில் ஜியோ நிறுவனத்தின் புதிய ரீசார்ஜ் திட்டம் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது ரூ.1 செலுத்தினால் போதும் என்று ஒரு திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் இணையும் பயனர்களுக்கு 100எம்பி டேட்டா கிடைக்கும். இது செல்லுபடியாகும் கால அளவு 30 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிவேக 4ஜி இணைப்பு மூலம் இந்த டேட்டாவை பயன்படுத்தமுடியும். 100எம்பி அளவுக்கு மேலான பயன்பாட்டிற்குக் கட்டணமில்லாமல் 64kpbs என்ற வேகக் குறைவான டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதியைப் பெற, ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio செயலில் உள்நுழைந்து, ரூ.1 திட்டத்தைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். மேலும், ரூ.15 ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா கிடைக்கும். இதனைப் பயன்படுத்தும் கால அளவு நடப்பு திட்டத்தை ஒத்திருக்கும். வேறெந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடமும் இது போன்ற திட்டம் இல்லை  என்பதால் இது பயனாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.