ஓபிஎஸ் ஆதரவாளர் தவெகவில் இணைந்தார் - அடுத்தது அவர்தான்..
ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
ஜே.சி.டி பிரபாகர்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் , விஜய்யின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார்.

இது தொடர்பாக ஜே.சி.டி. பிரபாகர் அளித்த பேட்டியில், நல்லாட்சி நடைபெறும் என்ற நம்பிக்கையில் விஜய்யின் தவெகவில் இணைந்து உள்ளேன். எம்.ஜி.ஆரை பார்க்கும் போது எனக்கு வந்த மகிழ்ச்சி, விஜய்யை சந்தித்த போதும் வந்தது.
நல்லாட்சி அமைய வேண்டும் என்ற மக்களின் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வீடுதோறும் விஜய் முழக்கமாக உருவாகி இருக்கிறது. தவெகவில் எனக்கு எந்த பொறுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டில் மாற்றம் இருக்க வேண்டும்.
தவெகவில் இணைப்பு
தமிழக மக்களிடம் ஏற்றம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் இருக்க வேண்டும். அதனை தவெக நிறைவேற்றும். எம்.ஜி.ஆர். என்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். அவர்களின் புகழை பரப்புவதாக இந்த இயக்கத்தைப் பார்க்கிறேன்.

அதிமுகவை ஒருங்கிணைக்க ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று போஸ்டர் அடித்து முயற்சி எடுத்தோம். அந்த முயற்சி வெற்றி பெறாது என்ற நிலை அதிமுகவில் உருவாகி விட்டது. தொண்டர்கள் வீதிக்குச் சென்றுவிடுவார்கள் என்றுதான் முயற்சி எடுத்தோம். அது வீணாய் போய் விட்டது.
அதனால் தான் தளபதி. புரட்சித் தளபதியின் இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். செங்கோட்டையன் இணைந்த பிறகு, அதிமுக தொண்டர்கள், தவெகவை நோக்கி ஈர்க்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அதிமுகவில் விரக்தியில் இருப்போருக்கு, விஜய் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதனால் அதிமுகவில் இருந்து சாரை சாரையாக அடிமட்டத் தொண்டர்கள் வரை தவெகவில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.