மதுரையில் ஜெயலலிதா கோவில்: இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதுரையில் கட்டப்பட்டுள்ள கோவிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம் டி.குன்னத்துாரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார். இதற்காக சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு வரும் முதல்வர் நேரடியாக டி.குன்னத்தூர் செல்கிறார். தொடர்ந்து கோ பூஜையில் பங்கேற்று, மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர், 120 பசுக்களை தானம் வழங்குகிறார்.
நலிவுற்ற, 234 கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்குகிறார். அங்கிருந்து அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற, சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். மதியம், 1:50 மணிக்கு, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அதற்கு காரணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்கள் தான். முதல் முறையாக, அவருக்காக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.