கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமானது அல்ல; இது ஓபிஎஸ்க்கு தெரியும் - ஜெயக்குமார் பேட்டி!
கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமானது அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
ஜெயக்குமார் பேட்டி
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கே சொந்தம் அல்ல என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் "ஓபிஎஸ் அன்றைக்கு சசிகலா, டிடிவி தினகரனை எதிர்த்து தர்மயுத்தம் செய்தார் .
இப்போது தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளார். ஓபிஎஸ் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத என்று தமிழ்நாடு மக்களும், அதிமுக தொண்டர்களும் உணர்ந்துள்ளனர். இவர்களின் இருவரும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்.
கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமானது அல்ல!
கொடநாட்டு பங்களாவில் கொலை,கொள்ளை நடந்தபோது குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குற்றவாளிகள் அனைவரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை வழக்கு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.
சட்டமன்றத்தில் கொடநாடு பற்றி முதலமைச்சர் பேசும்போது, அதை எதிர்த்து மறியல் போராட்டம் அன்று செய்தவர் பன்னீர்செல்வம். இன்றைக்கு ஓபிஎஸ்சும், டி.டி.வி.யும் கொடநாடு பற்றி பேசுவது விந்தையாக உள்ளது. ஜெயலலிதா வசித்த வீடு கோவில் போன்றது என்று ஓபிஎஸ் இன்று பேசுகிறார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியது உண்மைதான். கொடநாடு பங்களா யாருக்குச் சொந்தம் என்று ஓபிஎஸ்க்கு நன்றாகத் தெரியும்.
கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கே சொந்தம் அல்ல. அந்த பங்களா தனியாருக்கு சொந்தமானது ஆகும். கொடநாடு பங்களாவை ஜெயலலிதா ஒரு முகாம் அலுவலமாக பயன்படுத்தினார். அந்த வீடு அவருக்கு சொந்தமானது அல்ல என்று ஜெயக்குமார் பேசியுள்ளார்.